செய்திகள்
அபராதம்

மஞ்சூரில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைகளுக்கு அபராதம்

Published On 2021-05-14 09:48 GMT   |   Update On 2021-05-14 09:48 GMT
தொடர்ந்து சில கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொது மக்களுக்கு பொருட்கள் வழங்குவதை கண்டு சம்மந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு அதிரடியாக அபராதம் விதித்தனர்.

மஞ்சூர்:

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளிலும் நாளுக்குநாள் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த 10-ந் தேதி முதல் மாநிலம் தழுவிய ஊரடங்கு அமலில் உள்ளது.

இதில் காய்கறி, மளிகை, உள்ளிட்ட குறிப்பிட்ட கடைகள் பகல் 12மணிவரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசின் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடித்து கடைகளை திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மஞ்சூர் பகுதியில் காய்கறி, மளிகை உள்ளிட்ட கடைகளுடன் அனுமதி மறுக்கப்பட்ட சில கடைகள், நிறுவனங்கள் பாதி அளவு திறக்கப்பட்டு பொருட்கள் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இதனால் பஜார் பகுதியில் பொதுமக்கள் கூட்டம் மிகுதியாக காணப்பட்டதுடன் கொரோனா அச்சமின்றி சமூக இடைவெளியை மறந்து நடமாடினார்கள்.

இது குறித்த புகாரின் பேரில் நேற்று குந்தா தாசில்தார் மகேஸ்வரி தலைமையில் துணை வட்டாட்சியர் கனிசுந்தரம் உள்ளிட்ட வருவாய்துறையினர் மஞ்சூர் பஜாரில் திடிர் சோதனை மேற்கொண்டார்கள்.

அப்போது கடைவீதியில் பொதுமக்கள் கூட்டமாக நிற்பதை கண்டு எச்சரித்து அனுப்பினார்கள்.

தொடர்ந்து சில கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொது மக்களுக்கு பொருட்கள் வழங்குவதை கண்டு சம்மந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு அதிரடியாக அபராதம் விதித்தனர்.

தொடர்ந்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு அனுமதிக்கப்பட்ட கடைகள் மட்டுமே திறக்க வேண்டும். திறக்கப்படும் கடைகளில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என தாசில்தார் மகேஸ்வரி எச்சரித்தார்.

Tags:    

Similar News