செய்திகள்
சரஸ்வதி

அந்தியூர் அருகே கிணற்றில் குதித்து புதுப்பெண் தற்கொலை

Published On 2020-11-30 01:58 GMT   |   Update On 2020-11-30 01:58 GMT
அந்தியூர் அருகே கிணற்றில் குதித்து புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
அந்தியூர்:

கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலைப்பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 23). ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் தேவர்மலை பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி (20). இவர்கள் 2 பேருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இதைத்தொடர்ந்து சரஸ்வதி கணவருடன் அந்தியூர் அருகே குப்பாண்டபாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். மேலும் கணவருடன் ஒரே மில்லில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சரஸ்வதி மாதேசிடம், ‘கடன் அதிகமாக உள்ளது. எனவே நாம் 2 பேரும் சொந்த ஊருக்கு சென்று விடலாம்’ என்று அடிக்கடி கூறி வந்துள்ளார்.

சம்பவத்தன்று காலை சரஸ்வதி மாதேஷிடம் அருகே உள்ள வீட்டுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அவர் வெகு நேரமாகியும் திரும்பி வரவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் மாதேஷ் நேற்று முன்தினம் ஆப்பக்கூடல் போலீஸ் நிலையத்தில் தனது மனைவி சரஸ்வதியை காணவில்லை என்று புகார் அளித்தார்.

இந்த நிலையில் குப்பாண்டபாளையம் அருகே உள்ள ஒரு கிணற்றில் ஒரு பெண்ணின் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி கயிறு கட்டி பிணத்தை மேலே கொண்டு வந்தனர். அந்த பெண், காணாமல் போன சரஸ்வதி என்பதும், அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.

உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் சரஸ்வதிக்கு திருமணம் நடந்து 3 மாதங்களே ஆவதால் கோபி ஆர்.டி.ஓ. ஜெயராமன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News