அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளர்களை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியல்
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் துப்புரவு பணியாளர்களை தாக்கியவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி நேற்று மாலை சாலை மறியல் செய்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர். அவர்களை கைது செய்யும் வரை பணி செய்யப் போவதில்லை. மருத்துவமனை அலுவலகம் முன்பே நாங்கள் தர்ணா இருப்போம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்போது பாதிக்கப்பட்ட ஒப்பந்த துப்புரவு பணியாளர் அருண் கூறுகையில், கொரோனா காலங்களில் மருத்துவமனை கட்டுப்பாட்டில் உள்ளதால் எங்களுக்கு அனாவசியமான ஆட்கள் உள்ளே வராமல் தடுக்க மேலதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி நாங்கள் கட்டுப்பாடுடன் பணிகள் செய்து கொண்டிருந்தோம். 2 வாலிபர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து கேட்டை திறக்கும்படி மிரட்டினர். தற்போது அனுமதி இல்லாததால் பின்னர் வருமாறு கூறினோம். அதையும் கேட்காமல் தகாத வார்த்தைகளால் திட்டினர். உடனே செல்போன் மூலம் அவர்களுடைய நண்பர்களுக்கு அழைப்பு கொடுத்து வரவைத்தனர்.
பின்னர் கற்களை எடுத்து வீசி எங்களை தாக்கினர். அவர்களை கைது செய்யாத வரை நாங்கள் பணி செய்யப் போவதில்லை. போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.