செய்திகள்
கோப்புப்படம்

அடிப்படை வசதிகள் கேட்டு துறையூரில் பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2021-07-16 09:31 GMT   |   Update On 2021-07-16 09:31 GMT
அடிப்படை வசதிகள் கேட்டு துறையூர் - பெரம்பலூர் சாலையில் காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
துறையூர்:

துறையூர் பெருமாள்மலை அடிவார பகுதியில் உள்ள எம்ஜிஆர் நகரில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் 15 குடும்பங்களுக்கு இதுநாள் வரை மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை, முறையான குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை சொரத்தூர் ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் புகார் மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் துறையூர் - பெரம்பலூர் சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதனை அறிந்த துறையூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று உரிய அதிகாரிகளுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News