செய்திகள்
தூத்துக்குடியில் கோடை வெயிலுக்கு இதமான இளநீர் விற்பனை விறுவிறுப்பு
தூத்துக்குடியில் இளநீர் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனை மக்கள் ஆர்வமுடன் வாங்கி குடித்து கோடை வெயிலை சமாளித்து வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் மக்கள் தண்ணீரில் தத்தளித்து வந்தனர். அந்த சூழலில் எப்போது வெயில் அடிக்குமோ என்று ஏங்கி கிடந்தனர். மழைக்காலம் முடிவுக்கு வந்த நிலையில், கோடைகாலம் மெல்ல மெல்ல உக்கிரத்தை காட்ட தொடங்கியது. கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. 100 டிகிரிக்கும் அதிமாக வெயில் மக்களை வாட்டி எடுக்கிறது. இதனால் மதியம் நேரங்களில் வெளியில் மக்கள் நடமாட்டம் குறைந்து உள்ளது. ஆங்காங்கே சாலையோரஙங்களில் புதிதாக இளநீர் கடைகள், கரும்பு சாறு கடைகள், கம்மங்கூழ், நுங்கு விற்பனை கடைகள் முளைத்து உள்ளன. இந்த கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
அதே போன்று கோடை வெயிலுக்கு இதமான இயற்கை பானமாக அமைந்து இருப்பது இளநீர். இந்த இளநீர் விற்பனை விறுவிறுப்பு அடைந்து உள்ளது. பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான இளநீர் விற்பனைக்காக தூத்துக்குடியில் குவித்து வைக்கப்பட்டு உள்ளன. ஒரு இளநீர் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனை மக்கள் ஆர்வமுடன் வாங்கி குடித்து கோடை வெயிலை சமாளித்து வருகின்றனர்.