இந்தியா
காணாமல் போன சிறுவன் மிரம் தரோன்

காணாமல் போன அருணாச்சல பிரதேச சிறுவனை கண்டுபிடித்துவிட்டதாக சீனா தகவல்

Published On 2022-01-23 09:33 GMT   |   Update On 2022-01-23 09:33 GMT
சிறுவன் வழிதவறி சீன பகுதிக்குள் நுழைந்திருந்தால், உடனே ஒப்படைக்குமாறு சீனாவுக்கு இந்திய ராணுவம் அறிவுறுத்தி இருந்தது.
புது டெல்லி:

கடந்த ஜனவரி 20-ம் தேதி மிரம் தரோன் என்ற 17 வயது சிறுவன் வேட்டையாடுவதற்காக வெளியே சென்றபோது, சீன ராணுவம் அவனை கடத்தி சென்றுள்ளதாக புகார் எழுந்தது. சீன வீரர்கள் இந்திய பகுதிக்குள்ளே நுழைந்து அவனை கடத்தியதாக தகவல்கள் வெளியாகின. 

மேல் சியாங் மாவட்டத்தின் ஜிடோ கிராமத்தில் வசிக்கும் மிரன் தரோன், இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பகுதியில் வேட்டையாடச் சென்ற போது சீன ராணுவத்தினரால் கடத்தப்பட்டதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் மத்திய அரசு வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த சிறுவன் வழிதவறி சீன பகுதிக்குள் நுழைந்திருந்தால், உடனே ஒப்படைக்குமாறு சீனாவுக்கு இந்திய ராணுவம் அறிவுறுத்தி இருந்தது.

இந்நிலையில் காணாமல் போன சிறுவனை சீன ராணுவம் கண்டுபிடித்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இது தொடர்பாக தேஸ்பூர் ராணுவ அதிகாரி ஹர்ஷ்வர்தன் பாண்டே கூறியதாவது:-

சீன ராணுவம் நம்மை தொடர்பு கொண்டு காணாமல் போனதாக கூறப்படும் இளைஞரை கண்டுபிடித்திருப்பதாக தெரிவித்துள்ளது. உரிய நடைமுறைகளின் படி இந்தியாவிடம் அந்த சிறுவனை ஒப்படைக்க உள்ளதாக சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஹர்ஷ்வர்தன் பாண்டே கூறினார்.
Tags:    

Similar News