செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை

திருச்சிற்றம்பலத்தில் டிராவல்ஸ் உரிமையாளர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

Published On 2020-11-20 03:32 GMT   |   Update On 2020-11-20 03:32 GMT
திருச்சிற்றம்பலத்தில் டிராவல்ஸ் உரிமையாளர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வானூர்:

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(வயது 40). டிராவல்ஸ் உரிமையாளர். நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனது குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். இந்தநிலையில் நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர்.

அங்கு அறையில் இருந்த 2 பீரோக்களை உடைத்து அதில் இருந்த 5 பவுன் நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். அதிகாலையில் எழுந்து பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே இது குறித்து ஆரோவில் போலீசுக்கு அவர் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய் தங்கம், ஆரோவில் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அங்கு வரவழைக்கப்பட்ட போலீஸ் மோப்ப நாய் சிறிது தூரம் ஓடிச் சென்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ளனர்.
Tags:    

Similar News