செய்திகள்
அமெரிக்கா

சவுதி அரேபியாவை சேர்ந்த 76 பேருக்கு எதிராக அமெரிக்கா விசா கட்டுப்பாடுகள் அறிவிப்பு

Published On 2021-02-27 01:24 GMT   |   Update On 2021-02-27 01:26 GMT
வெளிநாடுகளில் உள்ள அதிருப்தியாளர்களை அச்சுறுத்துவதாக கூறி சவுதி அரேபியாவை சேர்ந்த 76 தனிநபர்களுக்கு எதிராக அமெரிக்கா விசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
வாஷிங்டன்:

சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, அமெரிக்காவின் பிரபல பத்திரிகையில் சவுதி அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், பட்டத்து இளவரசருக்கு எதிராகவும் கட்டுரைகளை எழுதி வந்தார்.

கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியாவின் தூதரகத்துக்கு சென்ற ஜமால் படுகொலை செய்யப்பட்டார். சவுதி அரேபியா அரசு தான் இந்த கொலையைத் திட்டமிட்டு நிகழ்த்தியதாக துருக்கி திட்டவட்டமாகக் கூறியதுடன் இதற்கான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டது. உலக அளவில் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், வெளிநாடுகளில் உள்ள அதிருப்தியாளர்களை அச்சுறுத்துவதாக கூறி சவுதி அரேபியாவை சேர்ந்த 76 தனிநபர்களுக்கு எதிராக அமெரிக்கா விசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

ஜமால் கஷோகியை பிடிக்கவோ அல்லது கொல்லப்படவோ எடுக்கப்பட்ட ஆபரேஷன் இஸ்தான்புல் என்பதற்கு  சவுதி பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் ஒப்புதல் அளித்திருக்க அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளதாக  அமெரிக்காவின் உளவுத்துறை அறிக்கை வெளியான சிறிது நேரத்திலேயே விசா தடை குறித்த அறிவிப்பு வெளியானது.  

இதுதொடர்பாக, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளின்கென் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், எதிர்க்கருத்துக்கள் உடையவர்கள், ஆர்வலர்கள், பத்திரிகையாளர்களை  அச்சுறுத்துதல் போன்றவை கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும். இதுபோன்ற செயல்கள் அமெரிக்காவால் சகித்துக் கொள்ளப்பட மாட்டாது என ஜோ பைடன் உறுதிபட தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.
Tags:    

Similar News