ஆன்மிகம்
வேளாங்கண்ணிக்கு சைக்கிளில் வந்த குழுவினரை படத்தில் காணலாம்.

வேளாங்கண்ணிக்கு சைக்கிளில் புனித யாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்திய குழுவினர்

Published On 2021-03-18 05:05 GMT   |   Update On 2021-03-18 05:05 GMT
தவக்காலத்தையொட்டி விருதுநகரில் இருந்து வேளாங்கண்ணிக்கு 21 பேரை கொண்ட குழுவினர் சைக்கிளில் புனித யாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் நாள் நெருங்குவதை அறிந்து உலக மக்களின் பாவங்களை போக்க உபவாசமிருந்து ஜெபித்தார். அவ்வாறு உபவாசமிருந்த காலத்தை நினைவுகூரும் விதமாக கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 40 நாள் உபவாசம் இருப்பது வழக்கம்.

இந்த நாட்களை தவக்காலம் என அழைக்கிறார்கள். தவக்காலம் தொடங்கும் நாள் சாம்பல் புதன் என்று அழைக்கபடுகிறது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கடந்த மாதம் (பிப்ரவரி) 17-ந் தேதியில் இருந்து தவக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் வேளாங்கண்ணிக்கு புனித பயணம் மேற்ெகாண்டு ஆரோக்கிய அன்னையை தரிசித்து செல்கின்றனர்.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து 21 பேர் கொண்ட குழுவினர் சைக்கிளில் வேளாங்கண்ணிக்கு புனித யாத்திரையாக வந்து, பேராலயத்தில் நேர்த்திக்கடன் செலுத்தினர். தவக்காலத்தையொட்டி தொடர்ந்து 13 ஆண்டுகளாக வேளாங்கண்ணிக்கு சைக்கிளில் புனித யாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துவதாக அந்த குழுவினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News