மே மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு மணிநேரத்துக்கு ஒரு மெட்ரோ ரெயில் சேவை
சென்னை:
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும், ரெயில்களிலும் கொரோனா தொற்றை தடுப்பதற்காக முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கொரோனா வைரசை கட்டுப்படுத்த அரசின் அறிவுறுத்தலின்படி மெட்ரோ ரெயில் சேவைகள் கடந்த 20-ந்தேதி முதல் மாற்றி அமைக்கப்பட்டது.
மேலும் அரசின் ஆணைப்படி மே மாதத்திலும் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் மெட்ரோ ரெயில் சேவை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.
விம்கோநகர்-விமான நிலையம் வரை மெட்ரோ ரெயில் சேவை 1 மணி நேர இடைவெளியில் இயக்கப்படும். சென்ட்ரல்-விமான நிலையம் வரை 2 மணிநேர இடைவெளியில் இயக்கப்படும்.
சென்ட்ரல்-பரங்கிமலை வரை 2 மணிநேர இடைவெளியில் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும். நாள் முழுவதும் உச்ச மணி நேரம் இல்லாமல் மெட்ரோ ரெயில் இயக்கப்படும்.
கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காகவும், அனைத்து பயணிகளின் பாதுகாப்பான பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் நிலையங்களில் நுழைவதற்கும், ரெயில்களில் பயணிப்பதற்கும் பயணிகள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.
தனிமனித இடைவெளியை கடைபிடித்து பயணம் செய்து மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு ஒத்துழைப்பு தருமாறு நிறுவனம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.