சுவாமிமலை அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்த அண்ணன்-தம்பி கைது
சுவாமிமலை:
தஞ்சை மாவட்டம் சுவாமிமலையை அடுத்த திருவலஞ்சுழி ரயிலடி தெருவைச் சேர்ந்த சாரங்கன் என்பவர் மகன்கள் ஏசுராஜ் (வயது 34), டேவிட்(28).
இவர்கள் இருவரும் அரசு அனுமதி பெறாமல் நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து விற்பனை செய்து வருவதாக சுவாமிமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். இதில் அங்கு வெடிகுண்டு தயாரிக்க வைக்கப்பட்டிருந்த திரி மற்றும் வெடிமருந்து பொருட்களை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மொத்தம் 100 வெடிகுண்டுகள் தயாரிக்க வைக்கப்பட்டிருந்த பொருட்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து வெடிகுண்டு தயாரித்த அண்ணன்- தம்பி 2 பேரையும் கைது செய்தனர்.
நாட்டு வெடிகுண்டு தயாரித்த அண்ணன்- தம்பி போலீசிடம் சிக்கிய சம்பவம் திருவலஞ்சுழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.