உள்ளூர் செய்திகள்
மரணம்

பணகுடி அருகே வடமாநில தொழிலாளி உள்பட 2 பேர் மூச்சுத்திணறலால் பலி

Published On 2021-12-07 06:45 GMT   |   Update On 2021-12-07 06:45 GMT
பணகுடி பகுதியில் நேற்று ஒரே நாளில் 2 பேர் மூச்சுத்திணறல் காரணமாக இறந்ததால் மீண்டும் கொரோனா தொற்று பரவுகிறதா என்று அந்த பகுதியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

பணகுடி:

நெல்லை மாவட்டம் பணகுடியில் உள்ள ஓடு தொழிற்சாலை ஒன்றில் வட மாநிலத்தை சார்ந்த சுமார் 45 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இதில் மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த பதான் சுரேன் (வயது 45) என்பவர் வேலை பார்த்து வந்தார். வேலைகளை முடித்துவிட்டு நேற்று இரவு சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றுள்ளார் பின்னர் அவருக்கு அளவுக்கு அதிகமாக இருமல் வந்ததாக கூறப்படுகிறது.

அங்கு வேலை பார்ப்பவர்கள், பதாம் சுரேனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவருக்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து பணகுடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின்பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பணகுடி அருகே கலந்த பனை ஊரை சேர்ந்தவர் ஜான்சன், கூலி தொழிலாளி. இவரது மனைவி செலின் (40) இவர்களுக்கு திருமணமாகி 15 வயதில் ஆண் குழந்தையும் இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. செலினுக்கு கடந்த பத்து வருடங்களாக மூச்சுத் திணறல் இருந்ததாகவும், இதனால் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று செலினுக்கு அளவுக்கதிகமான மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார். இதனால் அவரை ஜான்சன் ஆட்டோவில் ஏற்றி சிகிச்சைக்காக அஞ்சுகிராமம் அருகே தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் செலின் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர். இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணகுடி பகுதியில் நேற்று ஒரே நாளில் 2 பேர் மூச்சுத்திணறல் காரணமாக இறந்ததால் மீண்டும் கொரோனா தொற்று பரவுகிறதா என்று அந்த பகுதியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News