செய்திகள்
மாயம்

நெல்லையில் ரூ.1½ லட்சத்துடன் நகை பட்டறை உரிமையாளர் மாயம்- கடத்தப்பட்டாரா?

Published On 2021-09-17 09:45 GMT   |   Update On 2021-09-17 09:45 GMT
நெல்லையில் ரூ.1½ லட்சம் பணத்துடன் நகை பட்டறை உரிமையாளர் மாயமாகி இருப்பதால் அவர் கடத்தப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:

நெல்லை டவுன் கருவேலம்குண்டு தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40). இவரது தம்பி கார்த்திகேயன் (38).

இவர்கள் இருவரும் டவுனில் நகை பட்டறை நடத்தி வருகின்றனர். நேற்று சிவக்குமார் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய கார்த்திகேயன், நான் தற்போது பெருமாள்புரம் பஸ் நிலைய பகுதியில் நிற்கிறேன்.

நகை வாங்க செல்வதற்காக ரூ.1½ லட்சம் கொண்டு வா என கூறி உள்ளார். சிறிது நேரத்தில் சிவக்குமார் பணத்துடன் அங்கு சென்றார். அங்கு ஒரு காரில் கார்த்திகேயனும், அவருடன் டவுனை சேர்ந்த 2 வாலிபர்களும் இருந்தனர். பணத்தை பெற்றுக்கொண்டு கார்த்திகேயன் காரில் சென்றுவிட்டார்.

மாலையில் சிவக்குமார் செல்போனில் தனது தம்பியை தொடர்பு கொண்டபோது அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. வெகுநேரம் ஆகியும் கார்த்திகேயனிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை.

இதனால் அவருக்கு சந்தேகம் வலுத்தது. இதையடுத்து சிவக்குமார் தனது தம்பி மாயமானது பற்றி பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணத்துடன் மாயமாகி இருப்பதால் அவர் கடத்தப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News