செய்திகள்
மாநில அரசுகளுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடாக 1.5 லட்சம் கோடி ரூபாய் வழங்க வேண்டியுள்ளது: மத்திய அரசு
மாநில அரசுகளுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடாக 1.5 லட்சம் கோடி ரூபாய் வழங்க வேண்டியுள்ளது என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே வரியான ஜிஎஸ்டி-யை நடைமுறைக்கு கொண்டு வந்ததால் மாநில அரசுகளுக்கு இழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதை சரி கட்ட மத்திய அரசு இழப்பீடு வழங்குவதாக தெரிவித்தது.
தற்போது மத்திய அரசு சரியான நேரத்தில் மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீட்டை சரியாக வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளன.
இந்நிலையில் இன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய அரசு எழுத்துப்பூவர்மாக ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் ‘‘மாநில அரசுகளுக்கு 1.5 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி இழப்பீடு வழங்க வேண்டியுள்ளது. இந்தத் தொகை 2020 ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையிலான பாக்கித் தொகையாயும்.
மத்திய அரசிடம் நிதி இல்லாத காரணத்தினால் வழங்க முடியவில்லை. ஜிஎஸ்டி வசூல் குறைவாக இருப்பதால் தற்போது கொடுக்க இயலாது. குறைவான வசூல் காலத்தில் இழப்பீடு கொடுக்க வேண்டுமா? என்ற சட்ட ஆலோசனை நடைபெற்று வருகிறது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு சுமார் 11,600 கோடி ரூபாய் ஜிஎஸ்டி இழப்பீடாக மத்திய அரசு வழங்க வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.