சென்னையில் ஒரே பகுதியில் 700 பேருக்கு நோய் தொற்று
ஆலந்தூர்:
சென்னையில் கொரோனா தொற்று வேகம் எடுத்து வருவதை தொடர்ந்து கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆதம்பாக்கம் பகுதியில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து உள்ளது. 163, 165, மற்றும் 177 ஆகிய 3 வார்டுகளில் தொற்று பரவல் தீவிரமடைந்து உள்ளது.
3 வார்டுகளிலும் 700 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 177-வது வார்டில் பாதிப்பு அதிகரித்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த பகுதியில் சுகாதாரத்துறை ஊழியர்கள் தடுப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். கட்டுப்பாட்டு பகுதிக்குள் அந்த வார்டு கொண்டுவரப்பட்டு சுகாதார நடவடிக்கைகள் அதிகப்படுத்தப்பட்டு உள்ளன.
தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அண்ணாநகர், ராயபுரம், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அடையாறு, ஆலந்தூர் மண்டலத்திலும் தொற்று அதிகரித்து உள்ளது.
இந்த 2 மண்டலத்திலும் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாநகராட்சி அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
வீடு வீடாக சென்று பரிசோதனை, காய்ச்சல் முகாம் போன்ற அடிப்படையான தடுப்பு நடவடிக்கைகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தொற்று உறுதியாகும் நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள்.
லேசான பாதிப்பு உள்ளவர்கள் வீட்டு தனிமையிலும், கவனிப்பு மையங்களிலும் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கிறார்கள். சென்னையில் தினசரி தொற்று பாதிப்பு 5 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. தினமும் 20 ஆயிரத்துக்கும் மேல் பரிசோதனைகள் செய்யப்படுகின்றனர்.
மருத்துவமனைகளில் 32 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.