செய்திகள்
உண்டியல் பணம் கொள்ளை

புவியூர் விநாயகர் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது

Published On 2019-10-22 11:58 GMT   |   Update On 2019-10-22 11:58 GMT
தென்தாமரைகுளம் அருகே உள்ள புவியூர் விநாயகர் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

தென்தாமரைகுளம்:

தென்தாமரைகுளம் அருகிலுள்ள புவியூரில் அம்பலத்தின் அருகில் சந்தி விநாயகர் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் கடந்த மாதம் 17-ந்தேதி இரவு மர்ம நபர் கோவில் கதவை உடைத்து கோவில் உள்ளே இருந்த உண்டியலையும் உடைத்து பணத்தைத் திருடி சென்றுள்ளார். மறுநாள் காலை கோவிலுக்கு வந்த பூசாரி பொன் சுரேஷ் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டு இருப்பதை பார்த்து ஊர்த்தலைவர் சுடலை மணிக்கு தகவல் கொடுத்தார்.

சுடலைமணி தென்தாமரை குளம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். சப்- இன்ஸ் பெக்டர் மீனா குமாரி வழக்குபதிவு செய்து உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்ம நபரை தேடி வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலையில் சப்-இன்ஸ் பெக்டர் ஜான்கென்னடி தலைமையில் போலீசார் தென்தாமரைகுளம் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது சித்தன்குடியிருப்பு விநாயகர் கோவில் அருகில் சந்தேகத்திற்கிடமாக மர்ம நபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் முகிலன் குடியிருப்பை சேர்ந்த சதாசிவம்(வயது56) என்பதும் புவியூர் சந்திபிள்ளையார் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய நபர் என்பதும் தெரிய வந்தது. இதனால் போலீசார் சதாசிவம் மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News