ஆன்மிகம்
சுவாமி வெள்ளிக்குதிரை வாகனத்தில் பரிவேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி

நெல்லையப்பர் கோவிலில் பரிவேட்டை நிகழ்ச்சி

Published On 2021-01-16 05:56 GMT   |   Update On 2021-01-16 05:56 GMT
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் சுவாமி வெள்ளிக்குதிரை வாகனத்தில் பரிவேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் பொங்கலுக்கு மறுநாள் கரிநாளில் சுவாமி வெள்ளிக்குதிரை வாகனத்தில் பரிவேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம் ஆகும். நெல்லையப்பர் குதிரையில் வேட்டைக்கு செல்லும்போது காந்திமதி அம்பாள், கரிநாளில் வேட்டைக்கு செல்லக்கூடாது என தடுக்கிறார். 

தடையை மீறி, நெல்லையப்பர் பரி வேட்டைக்கு சென்று விடுகிறார். இதனால் கோபமடைந்த அம்பாள், நெல்லையப்பர் வேட்டை முடித்து திரும்பும்போது, கோவில் கதவை மூடியதாகவும், அதன்பின் சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடப்பட்ட, திருமுருகன் பூண்டி பதிகம் பாடிய பின் கோவில் நடை திறந்ததாகவும் ஆன்மிக வரலாறு கூறுகிறது.

இதையொட்டி நேற்று நெல்லையப்பர் கோவிலில் இருந்து சுவாமி நெல்லையப்பர், சந்திரசேகரர் உற்சவ மூர்த்தியாக வெள்ளிக்குதிரை வாகனத்தில் கண்ணப்ப நாயனாருடன் புறப்பட்டு சென்றார். பின்னர் பழைய பேட்டையில் அமைந்துள்ள பரிவேட்டை மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. 

இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் நெல்லையப்பர் கோவிலுக்கு திரும்பினார். சுவாமி கோவிலுக்கு வந்த போது, அம்பாளின் ஊடலினால், சுவாமி சன்னதி கதவு பூட்டப்பட்டிருந்தது. அதன்பின் சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச்செய்த பதிகம் பாடி ஊடல் தீர்த்து வைத்தப்பின், கோவில் கதவு திறந்து சுவாமி கோவிலுக்குள் நுழைந்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News