செய்திகள்
பறவைகள் சரணாலயத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பறவைகள் வந்திருந்த காட்சி.

10 மாதங்களுக்கு பிறகு வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் திறப்பு

Published On 2021-01-11 01:21 GMT   |   Update On 2021-01-11 01:21 GMT
10 மாதங்களுக்கு பிறகு வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் திறக்கப்பட்டது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மதுராந்தகம்:

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழைக்கு பின்னர் ஆயிரக்கணக்கான பறவைகள் வெளிநாடுகளில் இருந்து வருகை தரும். அவை 6 மாதம் தங்கியிருந்து மீண்டும் தங்கள் நாடுகளுக்கு சென்று விடும். இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக மழை பெய்ததால் வேடந்தாங்கல் ஏரி தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதையடுத்து முன்னதாகவே பறவைகள் வரத்தொடங்கி உள்ளன. இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து அரியவகை பறவைகளான நத்தை குத்தி, நாரை, சாம்பல் நாரை, வெள்ளை நாரை, மிளிர் உடல் அரிவாள் மூக்கன் நீர்காகம், கூழைக்கிடா என 20 ஆயிரத்துக்கும் அதிகமான பறவைகள் வந்துள்ளன.

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையால் கடந்த மார்ச் மாதம் வேடந்தாங்கல் சரணாலயம் மூடப்பட்டது. பறவைகள் வந்த நிலையில் சரணாலயத்தை திறக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று 10 மாதங்களுக்கு பிறகு நேற்று சரணாலயம் திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. சரணாலயத்தில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News