செய்திகள்
அதிமுக

‘மனசெல்லாம் இ.பி.எஸ்.’, ‘மக்களுக்காக இ.பி.எஸ்’: அ.தி.மு.க. ஐ.டி. பிரிவு பிரசாரத்தை தொடங்கியது

Published On 2020-10-27 15:27 GMT   |   Update On 2020-10-27 15:27 GMT
தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் வர இருக்கும் நிலையில், அதிமுக ஐ.டி. பிரிவு பிரசாரத்தை தொடங்கியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் வர இருக்கிறது. இதை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தற்போது மக்களிடம் அரசியல் கட்சிகளின் கருத்துக்களை கொண்டு செல்வதற்காக அந்தந்த கட்சி சார்பில் ஐ.டி. பிரிவுகள் உள்ளன. சமூக ஊடகங்கள் வழியாக மக்களை கவர்வதற்காக கட்சியின் கருத்துக்களை பல்வேறு கோணங்களில் ஐ.டி. பிரிவு தகவல்களை பரப்பி வருகின்றன.

அ.தி.மு.க. ஐ.டி. பிரிவு ஏற்கனவே அரசின் திட்டங்கள், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சாதனைகள், சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை ஊடகங்கள் வழியாக வெளியிட்டு வருகிறது. சட்டசபை தேர்தலை அ.தி.மு.க. சந்திக்கவும், அரசின் பக்கம் மக்களை திருப்பவும் பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளது.

இந்த நிலையில் 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை அ.தி.மு.க. ஐ.டி. பிரிவு விஜயதசமி தினமான நேற்று தொடங்கியது. அ.தி.மு.க. முதல்-அமைச்சர் வேட்பாளரான எடப்பாடி பழனிசாமியை பெருமைப்படுத்தும் வகையில் “மனசெல்லாம் இ.பி.எஸ்.”, “மக்கள் மனதில் இ.பி.எஸ்.” என்ற வாசகத்துடன் இந்த பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக 5 வாரங்களுக்கு ஆன்லைன் மூலம் அ.தி.மு.க. தேர்தல் பிரசாரம் ஐ.டி. பிரிவு மூலம் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு கருத்தை அடிப்படையாகக் கொண்டு பிரசாரம் இடம் பெறுகிறது.

இதில் சென்னை நகரம் முழுவதும் அமைக்கப்படும் அ.தி.மு.க. விளம்பரங்கள், மின் விளக்கு போர்டுகள் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. அரசின் சாதனைகள், எடப்பாடி பழனிசாமியின் சிறந்த தலைமை, அவரால் மக்களுக்கு செய்யப்பட்ட சேவைகள், நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அகியவற்றை வெளிப் படுத்தும் வகையில் இந்த பிரசாரம் அமையும்.

எடப்பாடி பழனிசாமி முதல்அமைச்சராக பதவி ஏற்ற பிறகு அ.தி.முக. அரசு நிறைவேற்றியுள்ள திட்டங்கள், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி ஆகிய வற்றை பிரதி பலிப்பதாக இந்த பிரசாரம் அமையும்.

அதற்கான ஏற்பாடுகளை அ.தி.மு.க. ஐ.டி. பிரிவு செய்துள்ளது. விஜயதசமி தினத்தில் இந்த பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. நிச்ச யம் இது மக்கள் மனதில் இடம் பிடிக்கும். மக்களிடம் அ.தி.மு.க. அரசு மீது நல்ல கருத்தை உருவாக்கும் என்று சென்னை மண்டல அ.தி.மு.க. ஐ.டி. பிரிவு முக்கிய பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News