உள்ளூர் செய்திகள்
காட்பாடி அருகே லாரி டிரைவர் அடித்துக் கொலை
காட்பாடி கிளித்தான் பட்டறையில் லாரி டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
வேலூர்:
காட்பாடி கிளிதான் பட்டறையை சேர்ந்தவர் ராமன் (வயது 45).இவர் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் செல்வம் என்கிற குள்ளன். நண்பர்களான இருவரும் கிளிதான் பட்டறையில் உள்ள தனியார் தங்கும் விடுதி அருகே மது அருந்துவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று இரவு இருவரும் வழக்கம்போல் மது அருந்தினர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த செல்வம் அருகில் இருந்த கட்டையை எடுத்து ராமனை சரமாரியாக தாக்கினார்.
இதில் ராமனின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. படுகாயமடைந்த ராமனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே ராமன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட செல்வத்திடம் என்ன காரணத்திற்காக கொலை நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.