உள்ளூர் செய்திகள்
.

மின்சாரம் தாக்கி வயர்மேன் சாவு

Published On 2022-04-17 06:08 GMT   |   Update On 2022-04-17 06:08 GMT
சங்ககிரி அருகே டிரான்ஸ்பார்மரில் ஏறி வேலை செய்தபோது மின்சாரம் தாக்கி வயர்மேன் இறந்தார்.
சங்ககிரி:

சங்ககிரி அருகே ஆலத்தூர் ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜவேலு (வயது 52). இவர் சங்ககிரி மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக வேலை செய்து வந்தார். 

இவர் நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு சென்றார். பின்னர் அவர் சங்ககிரி அருகே சுண்ணாம்புகுட்டை புளியான்காடு பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி வேலை செய்வதற்காக மின்சாரத்தை துண்டித்தார்.

இதையடுத்து டிரான்ஸ்பார்மரில் ஏறி வேலை செய்து கொண்டிருந்தபோது தீடீரென மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து ராஜவேலுவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் டிரான்ஸ்பார்மரில் இருந்து கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன், உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் சகுந்தலா ஆகியோர் ஆய்வு நடத்தினர். 

மேலும் தகவல் அறிந்து வந்த சங்ககிரி போலீசார் பலியான ராஜவேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், சுண்ணாம்புகுட்டை பகுதியை சேர்ந்தவர்கள் யூ.பி.எஸ். அல்லது ஜெனரேட்டர் பயன்படுத்தி இருந்தால் மின்கம்பி மூலம் ரிட்டன்சப்ளை வருவதற்கு வாய்ப்பு என்றும், அதனால் ராஜவேலு மின்சாரம் தாக்கி இறந்திருக்கலாம் என தெரிவித்தனர். 

எனினும் இதுகுறித்து சங்ககிரி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சுதாகரன் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகிறார். 
Tags:    

Similar News