செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

அந்தியூரில் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 7 போலீசாருக்கு கொரோனா

Published On 2021-10-08 08:30 GMT   |   Update On 2021-10-08 08:30 GMT
அந்தியூரில் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 7 போலீசாருக்கு கொரோனோ தொற்று உறுதியானதையடுத்து அவர்கள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அந்தியூர்:

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைதோறும் மெகா தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது. அதேபோல் ஈரோடு மாவட்டத்திலும் 4 கட்ட தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதில் அந்தியூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றக்கூடிய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 6 போலீசாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர்கள் ஆஸ்பத்திரியில் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் அவர்கள் 6 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டும் அந்தியூர் போலீஸ் நிலையத்துக்கு ஆய்வுக்கு சென்று வந்தார். இதனால் அவரும் கொரோனா பரிசோதனை செய்தார். இதில் அவருக்கும் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து பாதிக்கப்பட்ட 7 பேரும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அவர்கள் வசித்த பகுதியில் சுகாதார பணியாளர்கள் கிருமிநாசினி அடித்தும், பிளிச்சீங் பவுடர் தெளித்தும் சுகாதார பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News