செய்திகள்
அடுக்குமாடி குடியிருப்புக்கு விண்ணப்பிக்க பல்லடத்தில் நாளை சிறப்பு முகாம்
அரசு நிர்ணயிக்கும் ரூ.1.50 லட்சம் பயனாளியின் பங்களிப்பாக செலுத்த சம்மதம் உள்ளவர்கள் முகாமில் பங்கேற்கலாம்.
பல்லடம்;
பல்லடம் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பெறுவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து பல்லடம் நகராட்சி ஆணையாளர் விநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பல்லடம் நகராட்சி பகுதியில் குடியிருக்கும் பொதுமக்களில், அவர்களது பெயரிலோ அல்லது குடும்பத்தார் பெயரிலோ, சொந்த வீடு அல்லது நிலம் இல்லாதவர்கள் மற்றும், குடும்பத்தாரின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்களுக்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
அரசு நிர்ணயிக்கும் ரூ.1.50 லட்சம் பயனாளியின் பங்களிப்பாக செலுத்த சம்மதம் உள்ளவர்கள் பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் நாளை 18-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி அளவில் நடைபெற உள்ள சிறப்பு முகாமில் கலந்துகொண்டு வீடு பெற விண்ணப்பிக்கலாம்.
குடும்பத் தலைவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல்கள், குடும்ப அடையாள அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், வங்கி இருப்பு கையேடு நகல், குடும்பத் தலைவர் புகைப்படம் உள்ளிட்டவைகள் கொண்டு வந்து விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த முகாமில் கலந்துகொள்ள முடியாதவர்களுக்காக நகராட்சி அலுவலக வேலை நாட்களில் அதாவது 24-ந்தேதி வரை விண்ணப்பம் பெறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.