செய்திகள்
திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 31ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
பொதுமக்கள் பலர் 2&வது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வராமல் உள்ளனர். எனவே குறிப்பிட்ட காலத்தில் 2&வது தவணை தடுப்பூசியை செலுத்தி கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89 ஆயிரத்து 880-ஆக உள்ளது.
இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 65 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்து 122 ஆக உள்ளது. மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 836 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதற்கிடையே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 2 பேர் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 922-ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 31ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதுடன், மீதமுள்ள 12 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
பொதுமக்கள் சிரமமின்றி வந்து செல்வதற்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் 24மணி நேர தடுப்பூசி மையம் செயல்படுகிறது. திருப்பூர் மாநகரில் நேற்று 7ஆயிரத்து 650பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
மாநகர் முழுவதும் இதுவரை 7ஆயிரத்து 650 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஜெகதீசன் கூறுகையில், பொதுமக்கள் பலர் 2வது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வராமல் உள்ளனர். எனவே குறிப்பிட்ட காலத்தில் 2வது தவணை தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும் என்றனர்.