செய்திகள்

சிறுவன் ஜலசமாதி அடைந்ததாக தவறான தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை

Published On 2019-04-23 08:29 GMT   |   Update On 2019-04-23 08:29 GMT
கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் ஜலசமாதி அடைந்ததாக தவறான தகவல் பரப்பியவர்கள் மீதுகடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கண்ணமங்கலம்:

திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அடுத்த படவேடு கிராமத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். ஆரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது மகன் தனநாராயணன் (வயது 16). வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த மார்ச் 24-ந்தேதி தனநாராயணன் கிணற்றில் தவறி விழுந்தார்.

தீயணைப்பு துறையினர் தனநாராயணன் உடலை மீட்டனர். அவரை பரிசோதித்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்து உடலை அங்கேயே விட்டு சென்றனர்.

அப்போது அங்கு வந்த சாமியார் ஒருவர் சிறுவன் ஜலசமாதி அடைந்து விட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து விவசாய நிலத்திலேயே ஜீவசமாதி நிலையில் தனநாராயணன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தின் அருகே அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் சிறுவனின் புகைப்படத்துடன் அருள்மிகு தவராஜ பாலயோகி சிவானந்த பரமஹம்ச தனநாராயணர் ஜீவசமாதி நிலையம் செல்லும் வழி என்று குறிப்பிட்டுள்ளனர்.

சிறுவனின் சமாதியை அவரது குடும்பத்தினர் மற்றும் சிலர் பூஜித்து வருகின்றனர். இந்த நிலையில் சிறுவன் அடக்கம் செய்யப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவியது. அதில் பத்மாசனம் முறையில் அமர்ந்து இருக்கும் சிறுவனின் உடலை தூக்கி வைத்து அடக்கம் செய்யப்படும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதையடுத்து சிறுவனின் மரணம் குறித்து விசாரணை நடத்த கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டார்.

இதுகுறித்து படவேடு கிராம நிர்வாக அலுவலர் மகாலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் சந்தவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அந்த புகாரில் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுவன் ஜலசமாதி அடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதால் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து கலெக்டர் கந்தசாமி முன்னிலையில் சிறுவனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

சிறுவன் தனநாராயணனுக்கு வலிப்பு நோய் உள்ளதால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் அவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். அதனை 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் உறுதி செய்துள்ளனர். ஆனால் சிறுவன் ஜலசமாதி அடைந்து விட்டார் என்று தவறான தகவலை சமூக வலைதளத்தில் பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படுகிறது என்றார்.

ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்ட தனநாராயணன் பிளஸ்-1 வகுப்பை தொடரவில்லை. அவருக்கு வலிப்பு நோய் இருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள சாமியார் ஒருவரின் அருளாசி பெற்று தியானம் செய்து வந்ததாக சிறுவனின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

இந்த நிலையில் அவர் கிணற்றில் விழுந்து இறந்துள்ளார். அவர் கிணற்றில் தவறுதலாக விழுந்து உயிரிழந்தாரா? அல்லது வேண்டுமென்றே உயிரிழந்தாரா? என்று விசாரணைக்கு பிறகு தெரியவரும் என்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக உரிய தகவல்கள் சேகரிக்காமலும், அதனை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காததாலும் தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, தூசி போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டு உள்ளார்.
Tags:    

Similar News