செய்திகள்
குமார் வேதமாணிக்கம்

தென்தாமரைகுளம் அருகே கடன் தொல்லையால் கல்லூரி ஊழியர் தற்கொலை

Published On 2021-07-28 17:21 GMT   |   Update On 2021-07-28 17:21 GMT
தென்தாமரைகுளம் அருகே கடன் தொல்லையால் தனியார் கல்லூரி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தென்தாமரைகுளம்:

தென்தாமரைகுளம் அருகே தேரிவிளையை சேர்ந்தவர் குமார் வேதமாணிக்கம் (வயது 55). இவர் ஒரு கல்லூரியில் அலுவலக ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஞான செல்வம் (52) என்ற மனைவியும், பீனா குமாரி (25) என்ற மகளும், ஷிபுகுமார் (20) என்ற மகனும் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மகளை திருமணம் செய்து கொடுத்தார். இதற்காக பலரிடம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் குமார் வேதமாணிக்கம் வேலை பார்த்த கல்லூரியில் இருந்து முறையாக சம்பளம் வழங்கவில்லை என்றும், கடன் கொடுத்தவர்களும் பணத்தை திருப்பி கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், அவர் மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையானார். மேலும், குடும்பம் நடத்த முடியாமல் வறுமையால் தவித்து வந்தார். கடந்த சில நாட்களாக குமார் வேதமாணிக்கம் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் எல்லோரும் தூங்க சென்றனர். திடீரென குமார் வேதமாணிக்கத்தின் அறையில் இருந்து சத்தம் கேட்டது. குடும்பத்தினர் சென்று பார்த்தபோது, குமார் வேதமாணிக்கம் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே, அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் குமார் வேதமாணிக்கம் பரிதாபமாக இறந்தார். இதைகண்டு குடும்பத்தினர் கதறி அழுதனர்.

பின்னர், இதுபற்றி தென்தாமரைகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்ேபரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜான் கென்னடி, செல்வராஜன் ஆகியோர் குமார் வேதமாணிக்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News