செய்திகள்
திருப்பூரில் பலத்த மழை - சாலைகளில் குளம் போல் தேங்கிய தண்ணீர்
இன்று திருப்பூரில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்திருந்தது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்தது. அதன்பிறகு கடந்த ஒரு வாரமாக மழை பெய்யவில்லை.
இந்தநிலையில் இன்று திருப்பூரில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்திருந்தது. இதையடுத்து இன்று மதியம் 1.30 மணியளவில் திருப்பூர் மாநகர் பகுதியில் லேசான தூரலுடன் மழை பெய்ய ஆரம்பித்தது. நேரம் செல்ல செல்ல பலத்த மழை பெய்தது.
இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளமான இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. மழைநீருடன் சாக்கடை கழிவுநீரும் சேர்ந்து வெளியேறியதால் கடும் துர்நாற்றம் வீசியது.
திடீரென மழை பெய்ததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். பொதுமக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு குடை பிடித்தப்படி சென்றனர்.
திருப்பூர் மாநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இன்று மழை பெய்ததால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.