செய்திகள்
மாசு கட்டுப்பாட்டு வாரிய உரிமம் புதுப்பித்தலுக்கு கால நீட்டிப்பு - தமிழக அரசுக்கு ஏ.இ.பி.சி., நன்றி
நிறுவனங்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ஆண்டுதோறும் புதுப்பிப்பதற்கு பதில் இனி 5, 10, 14 ஆண்டுகளுக்கு புதுப்பித்துக் கொள்ளலாம்.
திருப்பூர்:
மாசு கட்டுப்பாட்டு வாரிய உரிமம் புதுப்பித்தலுக்கு கால நீட்டிப்பு வழங்கியுள்ளதற்கும், விதிமுறைகளை எளிமைப் படுத்தியதற்கும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக்கழகம் (ஏ.இ.பி.சி.,) நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
தொழிற்சாலைகள் இயங்குவதற்கு பெறப்படும் மாசுகட்டுப்பாடு வாரிய உரிமத்தை ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டியிருந்தது. இதற்குபதிலாக தகுதியான நிறுவனங்களுக்கு புதுப்பித்தல் காலத்தை நீட்டித்து வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக நன்றி தெரிவிக்கிறோம்.
நிறுவனங்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ஆண்டுதோறும் புதுப்பிப்பதற்கு பதில் இனி 5, 10, 14 ஆண்டுகளுக்கு புதுப்பித்துக் கொள்ளலாம். தொழில்துறையினரின் இன்னல்களை உணர்ந்து விதிமுறைகளை எளிமைப்படுத்தி ஊக்குவிப்பது வரவேற்கத்தக்கது.
தமிழகத்தில் எளிதாக தொழில் செய்யலாம் என்கிற முதல்வரின் அழைப்புக்கு வலுசேர்க்கும் வகையில் இந்த அறிவிப்பு உள்ளது. தொழில் துறையில் வெளிப்படைத் தன்மை அதிகரிக்கும். பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் திகழ்கிறது. தொழில் வளர்ச்சி அதிகரிக்க பேருதவியாக இருக்கும். இவ்வாறு சக்திவேல் கூறியுள்ளார்.