செய்திகள்
கேஎஸ் அழகிரி

10 சதவீத இடஒதுக்கீட்டை அவசரமாக அமல்படுத்த வேண்டிய அவசியம் என்ன?- கேஎஸ் அழகிரி கேள்வி

Published On 2020-10-16 21:05 GMT   |   Update On 2020-10-16 21:05 GMT
பொருளாதார ரீதியில் நலிந்தோருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை அவசரமாக அமல்படுத்த வேண்டிய அவசியம் என்ன? என்று கேஎஸ் அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை:

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அகில இந்திய தொகுப்புக்கு மாநிலங்களில் இருந்து ஒதுக்கீடு செய்யப்படும் மருத்துவ மேற்படிப்பு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்ய உயர்நீதிமன்றமே தீர்ப்பளித்த பிறகும் அந்த தீர்ப்பை செயலற்றதாக ஆக்கும் வகையில் மத்திய பா.ஜ.க. அரசு சுப்ரீம் கோர்ட்டில் மறுப்பு தெரிவித்திருப்பது இடஒதுக்கீட்டுக்கு எதிரானது.

தற்போது வங்கிகளில் காலியாகவுள்ள 1,417 இடங்களுக்கு ஆட்களை நிரப்பவேண்டும். அந்த வகையில் பிற பின்தங்கிய வகுப்பினருக்கு 300 இடங்களும், எஸ்.சி., பிரிவினருக்கு 196 இடங்களும், எஸ்.டி., பிரிவினருக்கு 89 இடங்களும் மட்டுமே கிடைக்கும். பொதுப் பட்டியலில் வருவோருக்கு 690 இடங்கள் கிடைக்கும். அதேசமயம், 10 சதவீத இடஒதுக்கீடு பெற்ற பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 142 இடங்கள் கிடைக்கும் என்பதுதான் விநோதம்.

பிற பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினரிடம் இருந்து 142 வங்கிப் பணியிடங்களை எடுத்து, உயர் சாதியினருக்கு மத்திய பா.ஜ.க. அரசு வழங்குகிறது. இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கும்போது, பொருளாதார ரீதியில் நலிந்தோருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை மோடி அரசு அவசர, அவசரமாக அமல்படுத்த வேண்டிய அவசியம் என்ன? இந்த அநீதியை ஒருபோதும் ஏற்க முடியாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News