செய்திகள்
தீயில் முற்றிலும் எரிந்து நாசமான கார்.

காரைக்குடி அருகே ஆவின் சேர்மன் கார் எரிப்பு- ரூ.5¼ லட்சம் கொள்ளை

Published On 2021-10-22 09:35 GMT   |   Update On 2021-10-22 09:35 GMT
காரைக்குடி அருகே ஆவின் சேர்மன் கார் எரிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கல்லுவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோகன். அ.தி.மு.க. மாவட்ட பேரவை செயலாளரான இவர், சிவகங்கை-ராமநாதபுரம் மாவட்ட ஆவின் சேர்மனாக உள்ளார். அசோகன் தற்போது குடும்பத்துடன் தேவகோட்டையில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை கல்லுவயலில் உள்ள அசோகன் வீட்டில் பயங்கர வெடி சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தபோது, வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இனோவா கார் எரிந்து கொண்டிருந்தது.

உடனே பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீணை அணைக்க முற்பட்டனர். ஆனாலும் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. அதே சமயத்தில் வீட்டின் கதவும் உடைக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்த தகவல் தேவகோட்டையில் இருந்த அசோகனுக்கு தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்து பார்த்த போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் திருடு போய் இருந்தது தெரியவந்தது. மேலும் வீடு முழுவதும் ஆங்காங்கே பொருட்கள் சிதறி கிடந்தன.

இந்த சம்பவம் தொடர்பாக அமராவதிபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை கொள்ளையடித்து விட்டு காருக்கு தீ வைத்து விட்டு சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

அரசியல் பழி வாங்கும் நோக்கத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

Tags:    

Similar News