செய்திகள்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே

வன்முறைகள் நிறுத்தப்பட்டால் மட்டுமே சிஏஏ வழக்குகள் விசாரணை -தலைமை நீதிபதி

Published On 2020-01-09 07:06 GMT   |   Update On 2020-01-09 07:06 GMT
நாட்டில் நடந்து வரும் வன்முறைகள் நிறுத்தப்பட்டால் மட்டுமே குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வழக்குகள் விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் பற்றியும் அதற்கு எதிராக நாடு முழுவதும் கிளம்பியுள்ள எதிர்ப்பலைகள் பற்றியும் அனைவரும் அறிந்ததே. நாடு முழுவதும் அரசியல் கட்சித்தலைவர்களும் சினிமா பிரபலங்களும் இது பற்றி தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு இடங்களில் போராட்டகளத்தில் வன்முறையும் வெடித்தது. மத்திய அரசின் இந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. 

இந்நிலையில், நாட்டில் நடந்து வரும் வன்முறைச் சம்பவங்கள் நிறுத்தப்பட்டால் மட்டுமே குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வழக்குகள் விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தெரிவித்துள்ளார்.



‘நாட்டில் கடுமையான சூழல் நிலவி வருகிறது. ஒரு வழக்கு விசாரிக்கப்பட்டால் அந்த விஷயத்தில் நீதிமன்றத்தின் நடவடிக்கை அமைதியை கொண்டுவருவதாக இருக்க வேண்டும்.

தற்போதைய சூழலில் இந்த வழக்குகளை விசாரித்தால் அமைதி  திரும்பும் என எண்ண முடியவில்லை. எனவே நாட்டில் நடந்து வரும் வன்முறை சம்பவங்கள் நிறுத்தப்பட்டால் மட்டுமே இந்த சட்டத்திற்கு எதிரான வழக்குகள் விசாரிக்கப்படும்’ என எஸ். ஏ பாப்டே தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News