செய்திகள்
இ.எஸ்.ஐ., மூலம் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டுகோள்
இ.எஸ்.ஐ., திட்ட உறுப்பினர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போட வேண்டுமென, திருப்பூர் பின்னலாடை தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருப்பூர்:
கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவும் நிலையில் தடுப்பூசி கிடைக்குமா என மக்கள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கின்றனர். தொழிலாளருக்கு முக்கியத்துவம் அளித்து நிறுவனங்களில் சிறப்பு முகாம் நடத்தி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
தொழிலாளர்களை தொற்றில் இருந்து காப்பாற்றினால் பாதிப்பை பாதியாக குறைக்க முடியும் என சுகாதாரத்துறை நம்புகிறது. அதேசமயம், சாமானிய தொழிலாளருக்கு தடுப்பூசி கிடைப்பதில்லை.
எனவே, இ.எஸ்.ஐ., திட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில், தடுப்பூசி போட வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து திருப்பூர் பி.எம்.எஸ்., தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், தமிழக அரசு ஏற்பாட்டில், அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி முகாம் நடக்கிறது.
திருப்பூர் பின்னலாடை தொழிலாளர் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இ.எஸ்.ஐ., திட்டத்தில் உள்ளனர். மத்திய, மாநில அரசுகள் ஏற்பாட்டில் இ.எஸ்.ஐ., மருந்தகங்களில் தொழிலாளருக்கு தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என்றனர்.