செய்திகள்
தமிழக அரசு

கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு

Published On 2020-11-30 04:04 GMT   |   Update On 2020-11-30 08:06 GMT
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் டிசம்பர் 31 வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அமலில் உள்ளது. எனினும்,  தொற்று பாதிப்பு குறையத்தொடங்கியதாலும், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியற்றை கணக்கில் கொண்டும் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து  ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.

தற்போது மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை திரும்பினாலும் இன்னும் ஒரு சில கட்டுப்பாடுகள் ஊரடங்கில் தொடர்ந்து அமலில் உள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் டிசம்பர் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் டிச.7ந்தேதி முதல் தொடங்குகிறது. கலை, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், மீன்வளம், வேளாண்மை உள்ளிட்ட படிப்புகள் தொடங்குகிறது. மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

* விளையாட்டு பயிற்சிக்காக மட்டும் நீச்சல் குளங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

* மருத்துவம், அனைத்து மருத்துவம் சார்ந்த கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை வகுப்புகள் டிச.7ந்தேதி முதல் தொடங்கும்.

* டிச.14ந்தேதி முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி அளிக்கப்படும். நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கடற்கரைகள் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும்.

* டிச.1ந்தேதி முதல் உள்அரங்கங்களில் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படும். அதிகபட்சம் 200 பேர் பங்கேற்கும் வண்ணம் உள் அரங்கங்களில் மட்டும் கூட்டம் நடத்திக்கொள்ளலாம்.

* அரசியல், மதம், பொழுதுபோக்கு கூட்டங்களுக்கு மாவட்ட கலெக்டர், காவல் ஆணையர் ஆகியோரிடம் முன் அனுமதி பெறுவது அவசியம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News