செய்திகள்
திருச்செங்கோடு அருகே பள்ளி மாணவன் குட்டையில் மூழ்கி பலி
திருச்செங்கோடு அருகே பள்ளி மாணவன் குட்டையில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு அருகே ஓ.ராஜபாளையம் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். பெயிண்டர். இவருடைய மகன் ஸ்ரீநிதி (வயது 12). இவன் திருச்செங்கோடு அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் நேற்று மதியம் ஸ்ரீநிதி மற்றும் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் களரங்குட்டையில் விளையாட சென்றனர்.
பின்னர் சிறுவர்கள் அங்குள்ள குட்டையில் குளித்தனர். ஸ்ரீநிதிக்கு நீச்சல் தெரியாததால் குட்டைக்குள் இறங்காமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான். அப்போது ஸ்ரீநிதி திடீரென உற்சாக மிகுதியில் குட்டையில் இறங்கி குளித்தான். ஆனால் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் இறங்கிய ஸ்ரீநிதி திடீரென மூழ்கினான்.
இதை பார்த்த மற்ற சிறுவர்கள் கூச்சல் போட்டதை அடுத்து அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தண்ணீரில் மூழ்கிய சிறுவனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்ததில் மாணவன் ஸ்ரீநிதி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.