கஜா புயல் நிவாரணம் உள்பட எந்த உதவியும் மத்திய அரசு தமிழகத்துக்கு செய்யவில்லை - தம்பித்துரை
திண்டுக்கல்:
பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை இன்று வேடசந்தூர் தொகுதிக்குட்பட்ட எரியோடு, நல்லமனார் கோட்டை பகுதியில் பொதுமக்களை சந்தித்து குறைகேட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தற்போது இடைக்கால பட்ஜெட்டில் 5 ஏக்கர் நிலம் வைத்து உள்ள விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம் ஆண்டுக்கு உதவி தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது வரவேற்கத்தக்கது. ஆனால் உதவி தொகையை ரூ. 12 ஆயிரமாக உயர்த்த வேண்டும். இதேபோல் வருமான வரி உச்சவரம்பினை ரூ. 5 லட்சமாக உயர்த்திஉள்ளனர். இதனை ரூ. 8 லட்சமாக உயர்த்த வேண்டும்.
கஜா புயல் நிவாரணம் ரூ. 9 ஆயிரம் கோடி தமிழகத்துக்கு வரவேண்டியது உள்ளது. அதைப்பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை. எந்த உதவியும் செய்ய இல்லை. தமிழகத்தின் எந்த பிரச்சினை பற்றியும் மத்திய அரசு கண்டுகொள்வது இல்லை.
மேகதாது அணை கட்டினால் டெல்டா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இடைக்கால பட்ஜெட் ஒரு டிரெய்லர் தான் என பிரதமர் மோடி குறிப்பிட்டு உள்ளார். இதில் உள்ள மக்கள் நல திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தபட வேண்டும். தமிழகத்துக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதிகளை மத்திய அரசு விரைவாக விடுவிக்க வேண்டும் .
இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #ThambiDurai