செய்திகள்
அரசகுமார் - முக ஸ்டாலின்

மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவு - அரசகுமார் மீது பா.ஜனதா நடவடிக்கை

Published On 2019-12-03 05:06 GMT   |   Update On 2019-12-03 05:06 GMT
திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு ஆதரவாக பேசிய அரசகுமார் பாஜக கட்சியின் சார்பில் எவ்வித நிகழ்ச்சிகளிலும், கலந்து கொள்ளக்கூடாது என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியின் நிர்வாகி இல்ல திருமண விழா நேற்று முன்தினம் நடந்தது.

இதில் பா.ஜனதா மாநில துணை தலைவர் பி.டி.அரசகுமார் கலந்து கொண்டு பேசியபோது, ‘மு.க.ஸ்டாலினை புகழ்ந்தார். அவர் பேசும்போது, எம்.ஜி.ஆருக்கு பிறகு நான் ரசித்த தலைவர் மு.க.ஸ்டாலின்தான். இயக்கத்துக்காக நன்றி கடன் பட்டவன். காலம் கனியும், காரியங்கள் தானாக நடக்கும். தளபதி அரியணை ஏறுவார். அதை பார்த்து நாம் அகம் மகிழ்ச்சி அடைவோம். நான் ஏற்கனவே தி.மு.க. கரை வேட்டி கட்டியவன். எப்போது வேண்டுமானாலும் கட்டிக்கொள்வேன். யாரும் கொடுத்து கட்ட வேண்டிய அவசியம் இல்லை’ என்றார். அவரின் இந்த பேச்சு பா.ஜனதாவில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அரசகுமார் மீது பா.ஜனதா சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக பா.ஜனதா தலைமை அலுவலக பொறுப்பாளரும் மாநில செயலாளருமான கே.எஸ். நரேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-



அரசகுமாரின் பேச்சு கட்சியின் கட்டுப்பாட்டையும், கண்ணியத்தையும் மீறிய செயலாக கருதப்படுவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேசிய தலைமைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தேசிய தலைமையில் இருந்து பதில் வரும் வரை அவர் கட்சியின் சார்பில் எவ்வித நிகழ்ச்சிகளிலும், கூட்டங்களிலும், ஊடக விவாதங்களிலும் கலந்து கொள்ளக்கூடாது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News