ஆன்மிகம்
சொக்கநாதபுரத்தில் நகரத்தார்களுக்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோவிலில் பொங்கல் வைத்த பெண்கள்

சொக்கநாதபுரத்தில் நகரத்தார்களுக்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோவிலில் பொங்கல் வைத்த பெண்கள்

Published On 2021-02-10 06:56 GMT   |   Update On 2021-02-10 06:56 GMT
கல்லல் அருகே சொக்கநாதபுரத்தில் நகரத்தார்களுக்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோவிலில் செவ்வாய் பொங்கல் விழா நடைபெற்றது.பெண்கள் நீண்ட வரிசையில் நின்று பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
கல்லல் அருகே உள்ள சொக்கநாதபுரத்தில் நகரத்தார்களுக்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை அன்று நகரத்தார்கள் சார்பில் ஒன்று கூடி கோவில் முன்பு பொங்கல் பானை வைத்து வழிபாடு செய்வது வழக்கம். சுமார் 100 ஆண்டுகளாக செவ்வாய் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த செவ்வாய் பொங்கல் விழாவில் பல்வேறு நாடுகளில் வசிக்கும் நகரத்தார்களும் கலந்துகொண்டு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இதையொட்டி நேற்று தை மாத கடைசி செவ்வாய்க்கிழமை முன்னிட்டு பொங்கல் விழா நடைபெற்றது.

இதையொட்டி காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்த பின்னரே பொங்கல் வைக்க புள்ளிகளின் அடிப்படையில் பெயர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்தனர். ஒரு புள்ளி என்பது ஒரு குடும்ப தலைவரை குறிக்கும்.அதில் தேர்வு செய்யப்படும் நபர் முதலில் மண் பானையில் பொங்கல் வைத்த பின்னர் மற்றவர்கள் பொங்கல் வைப்பார்கள்.

அதன்படி நேற்று குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட முத்துராமன் செட்டியார் மகன் கருப்பையா செட்டியார் முதல் பொங்கல் வைக்க அதன் பின்னர் 319 பெண்கள் நீண்ட வரிசையில் நின்று விறகு அடுப்பில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். ஒரே நேரத்தில் பெண்கள் வரிசையாக நின்று பொங்கல் வைத்த காட்சி பார்க்க அற்புதமாக இருந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் பொங்கல் பொங்கிய பின்னர் பெண்கள் குலவையிட்டு சாமி கும்பிட்டனர். விழாவில் கலந்துகொள்வதற்காக துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் வசித்து வரும் நகரத்தார்களும் திரளாக கலந்துகொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை நகரத்தார்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News