செய்திகள்

சங்கராபரணி ஆற்றில் மணல் கடத்திய 23 மாட்டு வண்டிகள் பறிமுதல் - 31 பேர் கைது

Published On 2019-06-19 09:55 GMT   |   Update On 2019-06-19 09:55 GMT
சங்கராபரணி ஆற்றில் நள்ளிரவில் மணல் கடத்திய 31 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 23 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
வில்லியனூர்:

புதுவை சங்கராபரணி ஆற்றில் மணல் கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே இதை தடுக்க 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது.

ஆனாலும் தொடர்ந்து மணல் கடத்தல் நடந்து வருகிறது. இதில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்காக நேற்று நள்ளிரவு போலீசார் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.

சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் தலைமையில் மேற்கு பகுதி சூப்பிரண்டு ரங்கநாதன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ஒதியம்பட்டு சங்கராபரணி ஆற்று பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஏராளமானோர் அங்கு மாட்டு வண்டிகளை கொண்டு வந்து மணலை திருடிக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தார்கள். அவர்கள் கொண்டு வந்திருந்த மாட்டு வண்டி, ஒரு மினிலாரி ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.

மொத்தம் 23 மாட்டு வண்டிகளும், மினி லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட சுபாஷ், பழனிவேலு, ஜெகன், சதிஷ்குமார், மணிவண்ணன் ஆகியோர் உள்ளிட்ட 31 பேர் கைது செய்யப்பட்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டிகள் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News