8 மாநில அரசுகளை பா.ஜனதா விதிகளை மீறி கவிழ்த்துள்ளது- மாணிக்கம்தாகூர் எம்பி குற்றச்சாட்டு
விருதுநகர்:
விருதுநகரில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் மாணிக்கம் தாகூர் எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-
ராகுல்காந்தி ஏழை- எளிய மக்களுக்காக உழைக்கக் கூடியவர். அவருடன் பிரசாரத்துக்கு செல்லும்போது மக்களுடன் எளிமையாக பழகுகிறார். இதை நம்மால் உணர முடிந்தது.
ராகுல்காந்தி மாத இறுதியில் தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 27 மற்றும் 28-ந்தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
விருதுநகர் மாவட்டத்தில் பிரசாரம் செய்வதற்கான சுற்றுப்பயணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், மத்திய பா.ஜனதா அரசு விதிகளை மீறி காங்கிரஸ் ஆண்ட மாநில அரசுகளை கவிழ்த்துள்ளது. தற்போது புதுச்சேரி காங்கிரஸ் அரசையும் கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதனை முன்னாள் மத்திய மந்திரி பொன்ராதாகிருஷ்ணன் ஒப்புக்கொண்டுள்ளார்.
மோடி ஆட்சி தொழில் அதிபர்களுக்காகவும், அரசியல்வாதிகளுக்காகவும் நடந்து வருகிறது. அ.தி.மு.க. தோல்வி பயத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேகமாக பிரசாரத்தை தொடங்கி விட்டார். சாத்தியம் இல்லையா? என்பது பற்றி உறுதி செய்யாமல் அறிவிப்புகளை அறித்து வருகிறார்.
தேவேந்திரகுல வேளாளருக்கு காங்கிரஸ் கட்சி தொடக்கம் முதல் அங்கீகாரம் அளித்து வருகிறது. அந்த பிரிவை சேர்ந்த அருணாச்சலம் 20 வருடங்களாக மத்திய மந்திரி சபையில் அங்கம் வகித்தார். தற்போது பா.ஜனதா தேர்தலுக்காக தேவேந்திரகுல வேளாளருக்கு ஆதரவு அளிப்பதாக நாடகம் ஆடுகிறது
இவ்வாறு அவர் கூறினார்.