செய்திகள்
பரமத்திவேலூரில் தேங்காய் விலை சரிவு
பரமத்திவேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் விலை குறைந்துள்ளது.
பரமத்திவேலூர்:
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் நாமக்கல் விற்பனை குழுவிலுள்ள பரமத்திவேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்திற்கு பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த தென்னை விவசாயிகள் தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வருகின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 1,247 தேங்காய்கள் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.31-க்கும், குறைந்தபட்சமாக ரூ.22-க்கும், சராசரியாக ரூ.26-க்கும் ஏலம் போனது.
மொத்தம் ரூ.10 ஆயிரத்து 428-க்கு வர்த்தகம் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 4 ஆயிரத்து 430 தேங்காய்கள் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.30-க்கும், குறைந்தபட்சமாக ரூ.22-க்கும், சராசரியாக ரூ.25-க்கும் ஏலம் நடைபெற்றது. மொத்தம் ரூ.28 ஆயிரத்து 969-க்கு வர்த்தகம் நடைபெற்றது. வியாபாரிகள் அதிக அளவில் வராததால் தேங்காய் விலை சரிவடைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.