செய்திகள்
கைதான சத்தியமூர்த்தி- எரித்துக் கொலை செய்யப்பட்ட திவ்யா

மனைவியை எரித்து கொன்ற வாலிபரை காட்டிக்கொடுத்த செல்போன் டவர்

Published On 2021-10-09 06:41 GMT   |   Update On 2021-10-09 06:41 GMT
மனைவிக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்து கொலை செய்த வழக்கில் தலைமறைவான கணவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அடுத்த புது பூங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 32). தனியார் டிரைவிங் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பயிற்சி பள்ளிக்கு வந்த கந்திலி அருகே உள்ள கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்த திவ்யா (24) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்தநிலையில், சத்தியமூர்த்திக்கு டிரைவிங் பயிற்சி பள்ளியில் பல பெண்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் நர்சிங் படித்துக் கொண்டிருக்கும், திவ்யாவின் உறவுக்கார பெண்ணான திருப்பத்தூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுடன் சத்தியமூர்த்திக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

நர்சிங் மாணவியும், சத்தியமூர்த்தியும் சென்னை போரூரில் வாடகை வீட்டில் கணவன், மனைவி போல் வசித்து வந்தனர். ஒரு கட்டத்தில் காதல் மனைவியை கொன்று விட்டு நர்சிங் மாணவியுடன் சேர்ந்து வாழும் முடிவுக்கு சத்தியமூர்த்தி வந்தார்.

இந்நிலையில் கடந்த மாதம் 25-ந்தேதி கோவிலுக்கு செல்வதாக திவ்யாவை குழந்தையுடன் சத்தியமூர்த்தி அழைத்து சென்றார். டிரைவிங் பயிற்சி அலுவலகத்தில் பைக்கை நிறுத்தி, கால்வலி குணமாகும் எனக்கூறி திவ்யாவிற்கு 2 தூக்க மாத்திரைகளை கொடுத்தார். இதை சாப்பிட்டு மயங்கிய திவ்யாவை அங்குள்ள விவசாய நிலத்தில் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விட்டு குழந்தையுடன் தப்பினார். இதில் படுகாயமடைந்த திவ்யா சிகிச்சை பலனின்றி இறந்தார்.

தலைமறைவான சத்தியமூர்த்தி தனக்கு நோய் இருப்பதாகவும் அதனால் காதல் மனைவியை பிரிந்து வாழ மனமில்லாமல் அவரை எரித்து விட்டேன். குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்வேன் என உறவினர்களுக்கு செல்போனில் வீடியோ பதிவு அனுப்பினார். இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கந்திலி போலீசார் தனிப்படை அமைத்து சத்தியமூர்த்தியை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், சத்தியமூர்த்தி நர்சிங் மாணவியை உடன் அழைத்து சென்றது தெரியவந்தது.

சென்னையில் இருவரும் குழந்தையுடன் செல்லும் சிசிடிவி பதிவு போலீசாருக்கு சிக்கியது. நர்சிங் மாணவியின் தந்தை போரூர் போலீஸ் நிலையத்தில் மகளை சத்தியமூர்த்தி கடத்திச் சென்றுள்ளதாக புகார் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து மற்றொரு தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். சத்தியமூர்த்தி வைத்திருந்த செல்போனை சுவிட்ச் ஆப் செய்திருந்தார். இதனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

சத்தியமூர்த்தி நர்சிங் மாணவி மற்றும் குழந்தையுடன் தஞ்சாவூர் பகுதியில் ஒரு வீட்டில் வாடகை வீடு எடுத்து கணவன்- மனைவி போல் வாழ்ந்து வந்தனர்.



சத்தியமூர்த்தி கூடுதலாக செல்போன் ஒன்றை வைத்துள்ளார். அதில் புதிய எண்ணை வாங்கி அதனை நேற்று முன்தினம் ஆன் செய்துள்ளார். அப்போது அந்த டவர் மூலம் அவர்கள் இருக்கும் இடம் போலீசாருக்கு தெரியவந்தது.

அதன் அடிப்படையில் நேற்று தஞ்சாவூர் சென்ற கந்திலி தனிப்படை போலீசார் சத்தியமூர்த்தியை மடக்கிப் பிடித்தனர். அங்கிருந்து நர்சிங் மாணவி மற்றும் குழந்தையையும் திருப்பத்தூருக்கு அழைத்து வந்தனர்.

சத்தியமூர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது:-

டிரைவிங் ஸ்கூல் நடத்தி வரும்போது திவ்யாவுடன் பழக்கம் ஏற்பட்டது. அவரை காதல் திருமணம் செய்து கொண்டேன். திவ்யாவின் மாமா பெண்ணான நர்சிங் மாணவிக்கு டிரைவிங் கற்றுக் கொடுக்கும்போது பழக்கம் ஏற்பட்டது. இதனால் எனக்கும் திவ்யாவுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டது

திவ்யா இருந்தால் நர்சிங் மாணவியை திருமணம் செய்ய விடமாட்டார் என்று முடிவு செய்து திவ்யாவை தனது அம்மா வீட்டிலிருந்து அழைத்து வந்து தூக்க மாத்திரை கொடுத்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றேன்.

சென்னைக்கு சென்று நர்சிங் மாணவியை அழைத்துக் கொண்டு தஞ்சாவூரில் வாடகை வீட்டில் வசித்து வந்தேன் என கூறியுள்ளார். போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News