திருமங்கலம் அருகே இன்று பஸ்சில் பயணம் செய்த தொழிலாளி மரணம்
திருமங்கலம்:
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் கல்யாண சுந்தரம் (வயது 42). கூலித் தொழிலாளியான இவர் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார்.
மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் டயாலிசில் சிகிச்சை பெறுவதற்காக கல்யாணசுந்தரம் இன்று அதிகாலை மம்சாபுரத்தில் இருந்து தனியார் பஸ்சில் புறப்பட்டார்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் பகுதியில் பஸ் வந்தபோது இருக்கையில் அமர்ந்திருந்த கல்யாணசுந்தரத்தை சக பயணிகள் கவனித்தபோது மூச்சு பேச்சின்றி கிடந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் ஆம்புலன்சு மூலம் கல்யாணசுந்தரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.