செய்திகள்
லாஸ்பேட்டையில் ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் தங்க சங்கிலி பறிப்பு
லாஸ்பேட்டையில் ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் தங்க சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
லாஸ்பேட்டை பாக்குமுடையான்பேட் வன்னியர் வீதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 74) ஓய்வுபெற்ற ஆசிரியர். நேற்று முன்தினம் மாலை அவர் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென்று சுந்தரமூர்த்தியின் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சங்கிலியை கட்டியாக பிடித்துக்கொண்டு கூச்சலிட்டார். உடனே அவர்கள் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பி ஓடினர். இதில் பாதி சங்கிலி சுந்தரமூர்த்தியின் கையில் சிக்கியது. மீதியை அவர்கள் பறித்து சென்றனர்.
இது குறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.