செய்திகள்

இந்து தீவிரவாதி என்று விமர்சனம் - கமல் பிரசாரத்துக்கு தடை விதிக்கப்படுமா?

Published On 2019-05-14 06:26 GMT   |   Update On 2019-05-14 07:06 GMT
இந்து தீவிரவாதி என்று விமர்சனம் தொடர்பாக கமல் பிரசாரத்துக்கு தடை விதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை:

அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளின் இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது.

பிரசாரம் ஓய்வதற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் இந்த தொகுதிகளில் அனல்பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது.

நடிகர் கமல்ஹாசன் இந்த 4 தொகுதிகளிலும் தனது மக்கள் நீதிமய்யம் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் அவர் அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் செய்தார்.

அந்த ஊரில் கமல்ஹாசன் பிரசாரம் செய்யும்போது, சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார்.

அவர் பேசுகையில், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து” என்று பேசினார். மத நல்லிணக்கம், மத ஒற்றுமை பற்றி பேசுகின்றனர். தேசிய கொடியில் உள்ள 3 வண்ணங்களும் அப்படியே இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

காந்தி சிலை முன்பு நின்று கொண்டு சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவன் பெயர் நாதுராம் கோட்சே. காந்தியின் கொள்ளுப் பேரனான நான், அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்துள்ளேன் என்று கூறினார். கமல் தனது பேச்சின் போது ஆவேசமாக இதை குறிப்பிட்டார்.

கமலின் இந்த பேச்சு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் எதிரொலித்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாரதிய ஜனதா, அ.தி.மு.க. தலைவர்கள் கமலின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிவசேனா கட்சியும் கமலின் பேச்சை கண்டித்துள்ளது.

அதே நேரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி கமலின் கருத்தை வரவேற்றுள்ளது. இதனால் கமலின் இந்து தீவிரவாதி பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும் வலுத்து வருகிறது.

 


தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒழுக்கத்தை கடைபிடித்த காந்தியின் கொள்ளுப்பேரன் என்று கூறுவதற்கு கமல் தகுதி இல்லாதவர். அவரது பேச்சு கண்டிக்கத்தக்கது.

தேர்தல் ஆணையம் கமல் மீது நடவடிக்கை எடுப்பதுடன் பிரசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, “மக்கள் நீதிமய்யம் முளையிலேயே கிள்ளி எரியப்பட வேண்டிய வி‌ஷ செடி. சிறுபான்மையினர் ஓட்டுக்காக இந்துக்களை கமல் இழிவுப்படுத்தி உள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த விவகாரம் பற்றி டெல்லியில் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர், “தீவிரவாதிக்கும், கொலைகாரனுக்கும் வித்தியாசம் தெரியாமல் கமல் பேசியுள்ளார். இது சிறுபான்மையினரை கவரும் செயலாகும் என்று தெரிவித்தார்.

பா.ஜனதா மூத்த தலைவரான சுப்பிரமணியசாமி கூறும்போது, இந்து மக்களை இழிவுப்படுத்திய கமலின் கட்சிக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதே நேரத்தில் கமல் ஹாசனின் ‘இந்து தீவிரவாதி’ கருத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோர் வர வேற்றுள்ளனர்.


இதற்கிடையே கமல் மீது டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் பா.ஜனதா கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த கட்சியின் சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் அஸ்வினிகுமார் உபாத்யாயா அளித்த மனுவில், கமல்ஹாசன் தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளார்.

எனவே, அவரது கட்சியின் பதிவை ரத்து செய்ய வேண்டும். குறைந்தது 5 நாட்களாவது அவரது பிரசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட வேண்டும்என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடமும் பா.ஜனதா சட்டப்பிரிவு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகார் மனுக்கள் மீது எதுபோன்று நடவடிக்கை எடுக்கலாம் என்பது பற்றி தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. எனவே கமலின் பிரசாரத்துக்கு தடைவிதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் அரவக்குறிச்சி தொகுதியில் நேற்று கமல் தனது பிரசாரத்தை திடீரென ரத்து செய்தார். ‘இந்து தீவிரவாதி’ கருத்தால், பா.ஜனதா மற்றும் இந்து அமைப்பினர் மத்தியில் கமலுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே கமலின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இது பற்றி மக்கள் நீதி மய்யம் கட்சியின் கரூர் மாவட்ட பொறுப்பாளர் புகழ் முருகன் கூறுகையில், வேலாயுதம்பாளையத்தில் கமல்ஹாசன் பங்கேற்க இருந்த பொதுக்கூட்டத்துக்கு தமிழக முதல்வர் வருகை, வைகோ பிரச்சாரம் போன்றவற்றால் அனுமதி கிடைக்கவில்லை. இதனால் பொதுக்கூட்டத்தை நாளை மறுநாள் 16-ந்தேதிக்கு ஒத்தி வைத்துள்ளோம் என்றார்.

இந்து அமைப்புகள், பா.ஜ.க. எதிர்ப்பு ஆகியவற்றால் கமல்ஹாசனின் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே நாளை மறுநாள் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கேட்டு கமல் கட்சியினர் தேர்தல் அதிகாரிகளிடம் மனு கொடுக்க நேற்று சென்றனர். இரவு 11 மணி வரை காத்திருந்த அவர்களிடம், இன்று காலை வருமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் திரும்பி சென்றனர்.

நாளை மறுநாள் 16-ந்தேதி கமல்ஹாசன் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட தென்னிலை, பரமத்தி, நொய்யல் ஆகிய இடங்களில் திறந்த வேனில் நின்றவாறு பிரசாரம் செய்ய கமல் திட்டமிட்டுள்ளார். மாலையில் வேலாயுதம்பாளையத்தில் பொதுக்கூட்டத்தில் பேசவும் அவர் முடிவு செய்துள்ளார். இதற்கு முறையான அனுமதி கிடைக்குமா? என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.

இதற்கிடையே சமூக வலைதளங்களில் கமல்ஹாசனை மிக கடுமையாக கேலியும், கிண்டலும செய்து நிறைய பேர் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

Tags:    

Similar News