ஆன்மிகம்
ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில்

ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா

Published On 2021-08-09 07:45 GMT   |   Update On 2021-08-09 07:45 GMT
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் திருவிழாவில் சிகர நிகழ்ச்சியாக சுவாமி உருகு பலகை தரிசனம் நடந்தது. பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அன்று முதல் சுவாமி தினமும் இரவில் சப்பரத்தில் பல்வேறு அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் எழுந்தருளல் காட்சி நடந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று மதியம் 1 மணிக்கு சுவாமி உருகு பலகை தரிசனம் நடந்தது. அதனைத்தொடர்ந்து சுவாமிக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சீவக்காய், பஞ்சாமிர்தம் போன்ற பலவகை பொருட்களால் அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகள், தீபாராதனைகளும் நடந்தது. மாலையில் இலாமிச்சைவேர் சப்பரத்தில் சேர்ம திருக்கோலக்காட்சியும், இரவு 10 மணிக்கு கற்பக பொன் சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனமும் நடந்தது. பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டனர்.

இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனம், மதியம் 1 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம் நடக்கிறது.

நாளை (செவ்வாய்க்கிழமை) காலை தாமிரபரணி நதியில் சகல நோய் தீர்க்கும் திருத்துறையில் சாமி நீராடல், மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவில் சுவாமி ஆலிலை சயன மங்கள தரிசனம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தபாண்டிய நாடார் செய்துள்ளார்.

Tags:    

Similar News