செய்திகள்
டோனி - தினேஷ் கார்த்திக்

டோனியை பின்பற்ற விரும்புகிறேன் - தினேஷ்கார்த்திக்

Published On 2019-10-19 10:16 GMT   |   Update On 2019-10-19 10:16 GMT
வெற்றிகரமாக ஆட்டத்தை முடிப்பதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனியை பின்பற்ற விரும்புவதாக தினேஷ்கார்த்திக் கூறியுள்ளார்.
சென்னை:

விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் தமிழக அணி தான் ஆடிய 9 ‘லீக்’ ஆட்டங்களிலும் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறியது.

விஜய் ஹசாரே போட்டியில் தமிழக அணி கேப்டனும், சர்வதேச வீரருமான தினேஷ் கார்த்திக்கின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது.

பெங்கால் அணிக்கு எதிராக 62 பந்தில் 95 ரன்னும், மத்திய பிரதேசத்துக்கு எதிராக 28 பந்தில் 65 ரன்களும் குவித்து சாதித்தார்.

20 ஓவர் உலக கோப்பை போட்டி அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இந்திய அணியில் மீண்டும் இடம் பெறும் வகையில் தினேஷ் கார்த்திக் ஆட்டம் கவரும் வகையில் உள்ளது.

இந்த நிலையில் தனது ஆட்டம் குறித்து தினேஷ் கார்த்திக் கூறியதாவது:-

கடைசி கட்டத்தில் சில ஓவர்கள் இருக்கும்போது அதிரடியாக விளையாடி ரன் குவிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல் 4 வரிசையில் பேட் செய்து அதிக ரன்கள் எடுப்பது எளிதானது என்று எனக்கு தெரியும்.

ஆனால் நெருக்கடியில் இருக்கும்போது அதிக ரன்களை குவிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

டோனி இந்திய அணிக்காக பல ஆண்டுகள் இதை செய்து இருக்கிறார். அவரையை நானும் பின்பற்றுகிறேன்.

ஆசிய கோப்பை மற்றும் சமீபத்தில் நடந்த 20 ஓவர் தொடர்களில் நான் அப்படி தான் ஆடி வந்து இருக்கிறேன். ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் சிறந்தவர் என்று சொல்லப்படுவதில் மகிழ்ச்சி தான். அதை நான் பலமாக கருதுகிறேன்.

தமிழக அணியில் ஷாருக்கான் சிறப்பாக ஆடி வருகிறார். அவர் சிறந்த அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்கிறார்.

இவ்வாறு தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
Tags:    

Similar News