செய்திகள்
அவினாசி கால்நடை மருத்துவமனையில் நிரந்தர மருத்துவர் இல்லாததால் பொதுமக்கள் தவிப்பு
அவினாசி கால்நடை மருத்துவமனையில் நிரந்தர மருத்துவர் நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவினாசி:
அவினாசி வட்டாரப் பகுதியில் விவசாயம் மற்றும் ஆடு, மாடு, கோழி, நாய் வளர்ப்புகள் அதிகம் உள்ளது. அவ்வாறு வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு நோய் பாதிக்கப்பட்டால் அவினாசி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்தநிலையில் கால்நடைகளுக்கு மருத்துவம் பார்க்க வந்தவர்கள் கூறுகையில்,
கடந்த 4 நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட கோழி, ஆடு, நாய் உள்ளிட்டவைகளை காலை 9 மணிக்கு மருத்துவமனைக்கு கொண்டு வந்தோம்.
நீண்ட நேரமாகியும் மருத்துவர் வராததால் அங்குள்ள ஊழியர்களை கேட்டபோது இந்த மருத்துவமனையில் நிரந்தர மருத்துவர் இல்லாததால் தற்காலிகமாக ஈரோடு மாவட்டம் பவானியிலிருந்து மருத்துவர் வருவார் என்று தெரிவித்தனர்.
கால்நடைகளுடன் நாங்கள் வெகுநேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுவதால் எங்களது அன்றாட பணி பாதிக்கப்படுகிறது.
எனவே அவினாசி கால்நடை மருத்துவமனையில் நிரந்தரமாக மருத்துவர் நியமிக்க வேண்டும் என்றனர்.