செய்திகள்
இண்டிகோ நிறுவனம்

சக்கர நாற்காலி கேட்டபோது தகராறு- பெண் பயணியை மிரட்டிய விமான கேப்டன் ‘சஸ்பெண்டு’

Published On 2020-02-11 10:49 GMT   |   Update On 2020-02-11 10:49 GMT
சென்னையில் இருந்து பெங்களூர் சென்ற இண்டிகோ விமானத்தில் சக்கர நாற்காலி கேட்டபோது ஏற்பட்ட தகராறில் பெண் பயணியை மிரட்டிய விமான கேப்டன் 3 மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:

பெங்களூரைச் சேர்ந்தவர் சுப்ரியா உன்னி. இவர் கடந்த மாதம் 14-ந்தேதி இண்டிகோ விமானத்தில் சென்னையில் இருந்து பெங்களூர் சென்றார்.

இவருடன், அவரது 75 வயதான தாயாரும் உடன் சென்றிருந்தார். விமானம் தரை இறங்கியபோது தாயாரை அழைத்து செல்வதற்காக சக்கர நாற்காலி கேட்டு விமான நிறுவனத்தின் சேவைப் பிரிவுக்கு போன் செய்தார்.

ஆனால் நீண்ட நேரமாகியும் சக்கர நாற்காலி வரவில்லை. எனவே சுப்ரியா உன்னி விமான பணியாளரிடம் சென்று நான் டிக்கெட் பதிவு செய்த போதே சக்கர நாற்காலி தேவை என குறிப்பிட்டதை சுட்டிக்காட்டினார்.

அப்போது விமான கேப்டன் ஜெயகிருஷ்ணா என்பவர் அங்கு வந்தார். அவர் சுப்ரியாவை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அவரை மிரட்டி உள்ளார்.

இந்த விவகாரத்தை சுப்ரியா சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டது.

அதன் பேரில் சம்பவம் தொடர்பாக இண்டிகோ நிறுவனம் விசாரணை நடத்தியது. இதில் சுப்ரியாவை, கேப்டன் ஜெயகிருஷ்ணா மிரட்டியது உண்மை என்பது தெரிய வந்தது.

இதையடுத்து ஜெயகிருஷ்ணாவை 3 மாதம் பணியிடை நீக்கம் செய்து இண்டிகோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
Tags:    

Similar News