தஞ்சை அருகே வழிப்பறி செய்ய திட்டமிட்ட 3 பேர் கைது
தஞ்சாவூர்:
தஞ்சை-நாகை பைபாஸ் ரவுண்டானா பகுதியில் வழிப்பறி செய்ய சிலர் திட்டமிடுவதாக தஞ்சை தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல் மற்றும் போலீசார் முருகேசன், சிற்றரசு ஆகியோர் விரைந்து சென்றனர்.
அப்போது ஆயுதங்களுடன் வழிப்பறி செய்வதற்காக திட்டம் போட்டுக் கொண்டிருந்தவர்கள் போலீசாரை கண்டவுடன் தப்பியோட முயன்றனர். இதில் தஞ்சை மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த ராஜா (வயது 31), மதன்ராஜ் (28), தஞ்சை வண்டிக்காரத் தெரு கார்த்தி (26) ஆகிய 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜா உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து அரிவாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் தப்பியோடிய கூடலூர் பிரசாந்த் மற்றும் ஜீவன் ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.