செய்திகள்
தீயில் கருகிய மோட்டார்சைக்கிள்.

பெரணமல்லூர் அருகே அதிமுக பிரமுகர் வீடு, மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு

Published On 2021-05-04 14:26 GMT   |   Update On 2021-05-04 14:26 GMT
பெரணமல்லூர் அருகே அதிமுக பிரமுகர் வீடு, மோட்டார்சைக்கிளுக்கு மர்மநபர் தீ வைத்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேத்துப்பட்டு:

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூரை அடுத்த முனுக்கப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி மனோகரன், முன்னாள் அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலர். அவர், தற்போது ஆரணியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருக்கு முனுக்கப்பட்டு கிராமத்தில் சொந்தமாக நிலம் உள்ளது.

நெற்பயிர் சாகுபடி செய்யும்போதும், உரமிடுதல், பூச்சி மருந்து தெளித்தல் ஆகிய பணிகளின்போது கிராமத்தில் தங்கியிருப்பார்கள். வேலைகள் முடிந்ததும் ஆரணிக்குச் சென்று விடுவார்கள். முனுக்கப்பட்டு கிராமத்தில் தற்போது யாரும் இல்லாதால் அங்குள்ள வீடு பூட்டிக்கிடந்தது.

அவரின் வீட்டுக்கு நேற்று அதிகாலை 4 மணியளவில் வந்த மர்மநபர் யாரோ முன்பக்க கதவின் மேலே உள்ள கம்பியை உடைத்து, அதன் வழியாக உள்ளே புகுந்துள்ளார். வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து சூறையாடி உள்ளார். பீரோவில் வைத்திருந்த துணிமணிகள், பொருட்கள், பத்திரங்கள் ஆகியவற்றை ஒரே இடத்தில் குவித்து தீ வைத்து விட்டு தப்பிச் சென்றார்..

தப்பிச்சென்ற மர்மநபர் நிலத்துக்குச் சென்று, அங்குள்ள பம்பு செட் கொட்டகையில் நிறுத்தி வைத்திருந்த மனோகரனின் மோட்டார்சைக்கிள், அவர் படுத்துத் தூங்கும் கட்டில் ஆகியவற்றுக்கு தீ வைத்து விட்டு தப்பிச் சென்றார். மேற்கண்ட இரு இடங்களில் தீப்பிடித்து எரிந்ததைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் பெரணமல்லூர் போலீசார், தீயணைப்பு நிலையம் மற்றும் மனோகரனுக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்புப்படை வீரர்கள் விரைந்து வந்து இரு இடங்களில் எரிந்த தீயை அணைத்தனர். இன்ஸ்பெக்டர் கோமளவல்லி, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடங்களுக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகை, தடயங்களை சேகரித்தனர்.

தீ வைப்பு சம்பவம் தேர்தல் முன்விரோதம் காரணமாக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News